இறந்தவர்களுக்கான பொது பிரார்த்தனைகள் (#11269)

அவரே கடவுள், அன்பிரக்கத்திற்கும் வள்ளன்மைக்கும் பிரபுவான அவர் மேன்மைப்படுத்தப்படுவாராக!

சர்வ சக்தி வாய்ந்த என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக. உமது சர்வ சக்திக்கும் உமது வலிமைக்கும்  உமது இறைமைக்கும்   உமது  அன்பிரக்கத்திற்கும் உமது அருளுக்கும் உமது ஆற்றலுக்கும் உமது திருவுருவின் ஒருமைத் தன்மைக்கும்  உமது சாராம்சத்தின் ஏகத்துவத்திற்கும் இப்படைப்புலகிலும் அதிலுள்ள அனைத்திற்கும் மேலான உமது புனிதத் தன்மைக்கும் உயர்வுக்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.

என் இறைவா! நான் உம்மைத் தவிர மற்றெல்லா வற்றிலிருந்தும் பற்றறுத்து, உம்மை இறுகப் பற்றி, உமது அருள் என்னும் சமுத்திரத்தின்பாலும் உமது கடாட்சம் என்னும் வானத்தின்பாலும் திரும்பி நிற்பதை நீர் காண்கின்றீர்.

பிரபுவே! நீர் இவ்வூழியனில் நம்பிக்கை வைத்துள்ளீர் என்பதற்கும் அந்த ஆவியின் வழியேதான் நீர் உலகிற்கு உயிரளித்துள்ளீர் என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.

உமது வெளிப்பாடு என்னும் கோளத்தின் சுடரொளியின் சாட்சியாக நான் உம்மிடம் கேட்கிறேன். உமது நாள்களில் அவர் சாதித்துள்ளவற்றினைக் கருணை கூர்ந்து ஏற்றுக் கொள்வீராக. அதன் காரணமாக  உமது நல்விருப்பம் என்னும் ஒளி அவருக்கு வழங்கப்படவும், உமது ஏற்பினால் அவர் அலங்கரிக்கப்படவும் அருள்வீராக.

என் பிரபுவே! தானாக நானும், படைப்புப் பொருள்கள் அனைத்தும், உமது வலிமைக்குச் சாட்சியம் பகர்கின்றோம்; தவிரவும், மனிதர் அனைவருக்கும் பிரபுவானவரே! உந்தன்பாலும், விண்ணுலகிலுள்ள உமது ஸ்தலத்தின்பாலும் உமது உயர்வான சுவர்க்கத்தின்பாலும், உமது அருகாமை என்னும் புகலிடத்தின்பாலும் திரும்பியுள்ள இவ்வான்மாவினை ஏற்க மறுத்திடாதீர்.

எனவே, என் இறைவா! இவ்வெழுதுகோல் அறிவிக்க இயலாத, இந் நா விவரிக்கவும் இயலாத வானுலக ஸ்தலங்களிலுள்ள உமது தேர்ந்தெடுக்கப்பட்டோருடனும் புனிதர்களுடனும் உமது தூதர்களுடனும் உமது இவ்வூழியன் கலந்துறவாட அனுமதித்திப்பீராக.

என் பிரபுவே, இவ்வறியோன் உமது செல்வம் என்னும் இராஜ்யத்திற்கும், இவ்வந்நியன் உமது சூழிடங்களுக்குள் இருக்கும் தனது உறைவிடத்திற்கும், கடுந்தாகமுற்ற இவன் உமது வள்ளன்மை என்னும் விண்ணுலக நதியின்பாலும், மெய்யாகவே, விரைந்து வந்துள்ளான். பிரபுவே, உமது அருட்கொடை என்னும் பெருவிருந்தில் உமது வள்ளன்மை என்னும் சலுகையில் தனது பங்கைப் பெற விடாது அவனைத் தடுத்திடாதீர். உண்மையிலேயே, நீரே எல்லாம் வல்லவர், அருளாளர், அதிவள்ளன்மை மிக்கவர்.

என் இறைவா, உமது பொறுப்பு உம்மிடமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. புதிதாக வரவேற்கப்பட்டுள்ள இவர்பால் உமது அன்பளிப்புகளையும், உமது அருள் என்னும் விருட்சத்தின் கனிகளையும் வழங்கிட உத்தரவாதமளிப்பது மண்ணுலக விண்ணுலக இராஜ்யங்களை உள்ளடக்கியுள்ள உமது    கிருபைக்கும்     உமது    வள்ளன்மைக்கும்

பொருத்தமானதாகும்! நீர் விரும்பியவாறு செய்யவல்ல ஆற்றல் மிக்கவர் நீரே; அருள்பாலிப்பவரும், அதி வள்ளன்மை மிக்கவரும், இரக்கக் குணமுடையவரும், வழங்குபவரும், மன்னிப்பாளரும், மதிப்புமிக்கவரும், எல்லாம் அறிந்தவரும் உம்மையன்றி  வேறெவருமிலர்.

 என் பிரபுவே,  மனிதர்கள்  தங்கள்  விருந்தினரைக் கௌரவிக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளீர் என்பதற்கும், உந்தன்பால் விண்ணுயர்ந்துள்ளோர் மெய்யாகவே உம்மை அடைந்து உமது முன்னிலையை எய்திட்டோர் ஆவர்  என்பதற்கும் நான் சாட்சியம் கூறுகின்றேன்.  ஆகவே, நீர் அவரை  உமது அருளுக்கும் வள்ளன்மைக்கும் ஏற்ப நடத்துவீராக!  உமது ஒளியின் சாட்சியாக, நீர் உமது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டுள்ளதனை நீரே செயல்படுத்தத் தவற மாட்டீர் என்றும், உமது வள்ளன்மை என்னும் கயிற்றினைப் பற்றிக் கொண்டு, உமது செல்வம் என்னும் பகலூற்றின்பால் உயர்ந்தெழுந்து வந்துள்ள அவரிடமிருந்து அதனைப் பறித்திடவும் மாட்டீர் என்றும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

அவ்வொருவரேயான, ஏகநாயகரான, சக்தி-மிக்கவரான, எல்லாம் அறிந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

-Bahá'u'lláh
-----------------------

இறந்தவர்களுக்கான பொது பிரார்த்தனைகள் (#11270)

என் கடவுளே! குற்றங்களை மன்னிப்பவரே! சன்மானங்கள் வழங்குபவரே! வேதனைகளைப் போக்குபவரே!

மெய்யாகவே, தூல உடலைத் துறந்து ஆன்மீக உலகினை வந்தடைந்தோரின் பாவங்களை மன்னிக்குமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். என் பிரபுவே! அவர்களைக் குற்றங்களிலிருந்து தூய்மைப்படுத்துவீராக;  அவர்களின் கவலைகளை அகற்றிடுவீராக; அவர்களது  இருளை  ஒளியாக  மாற்றுவீராக. அவர்களைப்  பேரின்பமெனும்  பூங்காவில்  பிரவேசிக்கச் செய்வீராக; அதி தூய நீரினால் அவர்களைச் சுத்தப்படுத்தி, அதி உயர்வான மலையின் மீதுள்ள உமது  சுடரொளியினைக் கண்ணுற அனுமதிப்பீராக.

-`Abdu'l-Bahá
-----------------------

இறந்தவர்களுக்கான பொது பிரார்த்தனைகள் (#11271)

என் கடவுளே! என் கடவுளே! உமது தெய்வீக அதிகாரத்தின் மாட்சிமையின் முன் பணிவுடனும் தாழ்மையுடனும் உமது ஒருமைத் தன்மையின் கதவருகில் நிற்கும் உமது  ஊழியர்  மெய்யாகவே  உம்மிலும் உமது வாசகங்களிலும் நம்பிக்கை வைத்து, உமது வார்த்தைகளுக்குச் சாட்சியமளித்து உமது அன்பெனும் தீச் சுடரினால் தூண்டப்பட்டு உமது அறிவெனும் சமுத்திரத்தின் ஆழத்தில் மூழ்கி உமது தென்றலினால் கவரப்பட்டு, உம் ஒருவரையே நம்பி, தனது  முகத்தை உந்தன்பால் திருப்பி, தனது மன்றாடலை உந்தன்பால் சமர்ப்பித்து, உமது மன்னிப்பையும், பொறுத்தருள்-தலையும் உறுதியாய் நம்பி இருக்கின்றார். அழியக்கூடிய இவ்   வாழ்க்கைதனைத் துறந்து  உம்மைச்  சந்திக்கும்  ஆவலில்  ஏங்கி,  நித்திய இராஜ்யத்தினை நோக்கிச் சிறகடித்துப் பறந்துள்ளார்.

பிரபுவே, இவரது ஸ்தானத்தை மேன்மைப்-படுத்துவீராக; உமது ஒப்புயர்வற்ற கருணையின் திருக்கூடாரத்தில் இவருக்கு ஆதரவளிப்பீராக. உமது மேன்மைமிகு சுவர்க் கத்தினுள் இவரைப் பிரவேசிக்கச் செய்வீராக; உமது உயர்வுமிக்க ரோஜாத் தோட்டத்தில் இருக்கும் அழியா வாழ்வினைத் தந்தருள்வீராக; அதனால் அவர் மர்மங்கள் நிறைந்த உலகில் ஒளியெனும் கடலில் மூழ்கக்கூடும்.

மெய்யாகவே நீரே தாராளமானவர், சக்திமிக்கவர், மன்னிப்பவர், வழங்குபவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

இறந்தவர்களுக்கான பொது பிரார்த்தனைகள் (#11272)

மன்னித்தருளும் பிரபுவே! சில ஆன்மாக்கள் தங்களின் வாழ்நாளை அறியாமையில் கழித்தும், நட்புறவற்றும், அடங்காத்தனமுடை-யோராகவும் உள்ளனர். இருப்பினும் உமது மன்னிப்பு என்னும் சமுத்திரத்திலிருந்து வரும் ஒரே அலையின்மூலம் பாவத்தினால் சூழப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவர். நீர் எவரை விரும்புகின்றீரோ, அவரை நம்பகமானவராக்குவீர், எவர் உமது தேர்வுப் பொருளாகக் கொள்ளப்பட வில்லையோ அவர் ஆணை மீறுபவராகக் கணிக்கப்படுவார். நீர், எங்களை உமது நீதி கொண்டு நடத்துவீராயின், நாங்கள் அனைவரும் பாவிகளேயல்லாது வேறிலர், ஆகவே உம்மிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் ஆகிடுவோம். ஆனால் நீர் இரக்கத்தினை மேற்கொள்வீராயின், ஒவ்வொரு பாவியும் தூயவனாகவும், ஒவ்வோர் அந்நியனும் நண்பனாகவும் ஆக்கப்படுவான். ஆதலின் உமது மன்னிப்பையும் பொறுத்தருள்தலையும் வழங்கி, அனைவருக்கும் உமது கருணையை நல்கிடுவீராக.

மன்னிப்பவரும் ஒளி வழங்குபவரும் எல்லாம் வல்லவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

